4 ஆண்டு இழுபறிக்குப் பின் சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் வழங்க இணங்கிய சீன வங்கி
நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதற்கட்டத்துக்கு, 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீனாவின் எக்சிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த வாரம், திறைசேரியின் வெளியக வளங்கள் திணைக்கள அதிகாரிகள் நடத்திய பேச்சுக்களை அடுத்து, சீன எக்சிம் வங்கிக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
ஐதேக அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடுவத்த தொடக்கம் மிரிகம வரையான 37 கி.மீ பகுதிக்காக அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு 2015ஆம் ஆண்டு சீனாவின் எக்சிம் வங்கியுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் சிறிலங்காவின் நிதி நிலைமை, அரசியல் பிரச்சினைகள், மற்றும் பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான நிதிகள் தொடர்பான மோசமான அறிக்கைகளால், இந்தக் கடனுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என்று திறைசேரியின் வெளியக வளங்கள் திணைக்கள பணிப்பாளர் ரத்நாயக்க தெரிவித்தார்.