அட்மிரல் கரன்னகொடவிடம் 8 மணி நேரம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எட்டு மணி நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
கொழும்பில் 11 இளைஞர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவே அட்மிரல் கரன்னகொடவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், அட்மிரல் கரன்னகொடவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனினும், இன்றைய நாள் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.
இதற்கமையவே, இன்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான அவரிடம், 8 மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதையடுத்து, மாலை 5 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் இருந்து வெளியேறினார்.