மேலும்

தலைமறைவான அட்மிரல் கரன்னகொட நாளை சிஐடியில் முன்னிலையாவார்

சிறிலங்கா காவல்துறையினரின் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வரும் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட நாளை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலையாகவுள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் அவரது வீடுகளில் தங்காமல், மறைந்திருக்கிறார்.

இந்தநிலையில், தம்மைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தடை விதிக்கக் கோரி, அட்மிரல் கரன்னகொட உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த 7ஆம் நாள் விசாரித்த உச்சநீதிமன்றம், அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை எதிர்வரும் 11ஆம் நாள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படியும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கமைய, நாளை காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி, அட்மிரல் கரன்னகொடவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

நாளை காலை கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகும் அவரிடம், குற்றச்சாட்டு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படும். அத்துடன் அவரிடம் வாக்குமூலமும் பெறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *