மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டனம்
சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வரும் 20ஆம் நாள் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ளார்.
15 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது.
அந்த அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.
அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர், அனைத்தலுக மனிதஉரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார்கள் என்று, ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன” என்றும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.