நொவம்பர் 10 க்குள் தேர்தலை நடத்தாவிடின் பதவி விலகுவேன் – மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை
நொவம்பர் 10ஆம் நாளுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படாவிட்டால், பதவியில் இருந்து விலகப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அவர்,
“மாகாணசபைத் தேர்தல்கள் தாமதமின்றி நடத்தப்பட வேண்டும். மோசடியான தேர்தலை நடத்துவதை விட, தேர்தலை தள்ளிப் போடுவது மோசமானது.
தேர்தல் தாமதமடைவது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் தனித்தனியாகச் சந்தித்து பேசினேன்.
எல்லா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடியுள்ளது.
தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு அரசியல் கட்சிகளுக்கு அடுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.