ஜப்பானிய, அவுஸ்ரேலிய தூதுவர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு
சிறிலங்காவுக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியமாவும், சிறிலங்காவில் பணிக் காலத்தை முடித்து நாடு திரும்பவுள்ள அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்ஸ்னும், நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.
தனித்தனியாக இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டுள்ள, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ,
“மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில், இரண்டு பிரதான கட்சிகளும், போதிய அக்கறை காட்டவில்லை.
சிறிலங்கா அதிபரும், பிரதமரும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.
இரண்டு பெரும்பான்மை கட்சிகளுமே, புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் மற்றும் நோக்கங்கள் குறித்து, தமது மக்களுக்கு தெளிவுபடுத்துவதில் அக்கறையின்றி செயற்படுகின்றன.
அதிகாரப்பகிர்வு நேர்மையானதாகவும், மக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தக் கூடிய வகையிலும் இருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.