மேலும்

கோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் சமல் – அதிபர் வேட்பாளராக தானும் தயார் என்கிறார்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

ராஜபக்ச சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஊடகவியலாளர்களிடம் நேற்று பேசிய போதே, இவ்வாறு கூறியிருக்கிறார்.

“மக்கள் தயார் என்றால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

அதிபர் பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும்  போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கிறேன்” என்று சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பொதுஜன முன்னணியின் வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும்,  அவர் யார் என்பதை இப்போது வெளியிட முடியாது எனவும், சில நாட்களுக்கு முன்னதாக, சமல் ராஜபக்ச கூறியிருந்தார்.

இதற்குப் பின்னர், கோத்தாபய ராஜபக்ச, அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று அறிவித்துள்ளதை அடுத்து, சமல் ராஜபக்ச, தானும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்சவின் இந்தக் கருத்து, ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே அதிபர் பதவிக்கான போட்டி, தீவிரமடைந்துள்ளது என்பதையே, வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *