மேலும்

மிகின் லங்கா காரில் வலம் வந்த மகிந்தவின் சோதிடர்

மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட சோதிடரின் பாவனைக்காக கார் ஒன்றை வழங்கியதன் மூலம், மிகின் லங்கா விமான நிறுவனத்துக்கு 8.2 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிகின் லங்கா விமான நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அதிபர் ஆணைக்குழுவிடம், மகிந்தவின் தனிப்பட்ட சோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தன, இதுதொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.

“2017ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில், எனக்கு கார் ஒன்று வழங்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி, தொலைபேசியில் அழைத்து, ராஜகிரியவில் உள்ள லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில்  வாகனம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.

நான் அங்கு காரின் சாவியைப் பெற்றுக் கொண்டேன். அந்த வாகனத்துக்கான ஒரு ஆண்டு காப்புறுதியும் பெற்றேன்.

நான்  முன்னாள் அதிபருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்ததால், அந்த கார் எனக்கு பரிசளிக்கப்பட்டதாக நினைக்கிறேன். எனினும், அந்த கார் மிகின் லங்கா நிறுவனத்துக்கு சொந்தமானது என்று எனக்குத் தெரியாது.

அதன் உரிமை யாருக்கு சொந்தம் என்று எனக்குத் தெரியாது.

அந்த காரை, 2007 தொடக்கம் 2015 வரை, 8 ஆண்டுகள் நான் பயன்படுத்தினேன்.  மகிந்த ராஜபக்ச 2015 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அந்தக் காரை, லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனம் மீளப் பெற்றுக் கொண்டது.” என்றும் சோதிடர் சுமணதாச சாட்சியம் அளித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் மிகின் லங்கா நிறுவனங்களால், 26 கார்கள் லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவனத்தில்   பெறப்பட்டதாகவும், இவற்றுக்கான தவணைக் கொடுப்பனவுகளை மிகின் லங்கா நிறுவனமே செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *