மேலும்

அமெரிக்காவின் பாரிய கடற்படை கூட்டுப் பயிற்சி – சிறிலங்கா கடற்படைக்கு முதல்முறையாக அழைப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்கா நடத்தி வரும் பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

ஹவாயில் பசுபிக் விளிம்பு ஒத்திகை என்ற பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியை  அமெரிக்கா நடத்தி வருகிறது.

1971ஆம் ஆண்டு அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டுப் பயிற்சி இந்த ஆண்டு வரும் ஜூன் 27ஆம் நாள் ஆரம்பமாகி, 29ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இம்முறை கூட்டுப் பயிற்சியில் இந்தியா, அவுஸ்ரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 20இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்க சிறிலங்காவுக்கு முதல் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பமாகும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா கடற்படையின் போர்க் கப்பல் ஒன்று ஹவாய்க்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை குறைத்திருந்த அமெரிக்கா அண்மையில், இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி வருகிறது.

இதன் அடுத்தகட்டமாகவே, சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா முதல்முறையாக கூட்டுப் பயிற்சிக்கான அழைப்பை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *