பிரித்தானிய நாடாளுமன்றில் எதிரொலித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்
லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்து, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ நாடு திரும்பிய பின்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், நடத்தப்பட்ட பேச்சுக்கள் தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்துமாறு, கடந்த புதன்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹைவெல் வில்லியம், ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரிடம், கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக, கடந்த ஏப்ரல் 18ஆம் நாள், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவைச் சந்தித்துப் பேசியதாக குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு ஆலோசகர் விவகாரம் குறித்தும் தாம் விசாரித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், ஏப்ரல் 15ஆம் நாளுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலரின் பதவிக்காலம் சிறிலங்கா அரசாங்கத்தினால் முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும், அதற்குப் பின்னர் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை எனவும், மார்க் பீல்ட் குறிப்பிட்டார்.