மேஜர் புலத்வத்த பிணையில் விடுவிப்பு
மூத்த ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தேக நபரான சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான மேஜர் பிரபாத் சீவலி புத்வத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கம்பகா இம்புல்கொடவில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள், ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோனும் அவரது மனைவியும் தாக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு, மேஜர் சீவலி புலத்வத்த கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
2017 ஏப்ரல் 7ஆம் நாள் கம்பகா நீதிமன்றம், அவரை பிணையில் விடுவித்திருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை கம்பகா நீதிமன்றம் மேஜர் புலத்வத்தைக்கு அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், கடந்த திங்கட்கிழமை சரணடைந்தார்.
இதையடுத்து அவரை நிபந்தனைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.