நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் – சம்பந்தன் சவால்
தமக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர, கூட்டு எதிரணியினர் முடிவு செய்திருப்பதாக வெளியான செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் நெறிமுறை அல்லது பாரம்பரியம் ஏதும் கிடையாது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை உலகில் வேறெங்கும் கொண்டு வரப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
பிரதமரை ஆதரித்ததற்காக என் மீது கூட்டு எதிரணியினரால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத் தயார்.
சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் தலைமையிலான கூட்டு அரசாங்கம், தற்போது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.