சிறிலங்காவில் அவசரகாலச்சட்டம் பிரகடனம்
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச்சட்டத்தைப் பிரகடனம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று முடிவு செய்துள்ளது. இன்று முற்கபல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது எழுந்துள்ள இன முரண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவசரகாலச்சட்டத்தைப் பிரகடனப்படுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்தார்.
இதுதொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பதற்றத்தை தணிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது சிறிலங்கா இராணுவமும் காவல்துறையும், பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளன.
அவசரகாலச்சட்டத்தை 10 நாட்களின் முடிவுக்குக் கொண்டு வர சிறிலங்கா அதிபர் முடிவு செய்யக் கூடும். எனினும், நிலைமைகளைப் பொறுத்து அது நீடிப்புச் செய்யப்படலாம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கண்டியில் பள்ளிவாசல்கள், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், வாணிப நிலையங்களுக்கு அருகில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடு்த்தப்பட்டுள்ளனர்.
பிந்திய செய்தி
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அசாதாரண நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.