தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கேட்டறிந்தார் அமெரிக்க தூதுவர்
அண்மையில் சிறிலங்காவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமெரிக்கத் தூதுவர் இன்று வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவு ஒன்றில், பாரபட்சமற்ற முறையில் நடத்தப்படுதல், மற்றும் எல்லா இலங்கையர்களுக்கும் நம்பிக்கை சுதந்திரம் என்பன தேவை என்று, தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்புடன் தாம் பேச்சு நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
தேவாலயங்கள் பலாத்காரமாக மூடப்படுதல், மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் மூடுமாறு கோரும் 24 சம்பவங்கள், 2015ஆம் ஆண்டிலும், 25 சம்பவங்கள் 2016ஆம் ஆண்டிலும், 2017ஆம் ஆண்டில் இதுவரை 9 சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக, தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டமைப்பின் பதிவுகள் கூறுகின்றன.
அதேவேளை, அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போது, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும், அமெரிக்கத் தூதுவர் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.