மேலும்

சுமுகமான சூழலில் வடக்கு மாகாணசபை அமர்வு – இரண்டு அமைச்சர்கள் மீதே புதிய விசாரணை

npcபுதிதாக அமைக்கப்படும் விசாரணைக் குழு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கீழ் உள்ள துறைகளிலும், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் கீழ் உள்ள துறைகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தே விசாரணை நடத்தவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பதவி விலகிய விவசாய மற்றும் கல்வி அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோர் தம் மீதான குற்றச்சாட்டுகளை  நிராகரித்திருந்ததுடன், அது குறித்து மீள்விசாரணை நடத்தவும் வலியுறுத்தியிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசனின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார்.

எனினும், புதிதாக அமைக்கப்படும் விசாரணைக் குழு இதுபற்றிய விசாரணைகளை முன்னெடுக்காது என்று  கூறப்படுகிறது.

அமைச்சர்கள் டெனீஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாத்திரமே இந்தக் குழு விசாரணை நடத்தும் என்று முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த விசாரணைக் குழுவை முதலமைச்சர் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்தவாரம் அமைச்சர்கள் மீதான முதலமைச்சரின் ஒழுக்காற்று நடவடிக்கையால் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைக்குப் பின்னர் இன்று முதல்முறையாக வடக்கு மாகாணசபையின் அமர்வு இடம்பெற்றது. இன்றைய அமர்வு மிகவும் சுமுகமான சூழலில் இடம்பெற்றது.

பதவி விலகிய அமைச்சர்களின் ஆசனங்கள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன. இதற்கமைய முதலமைச்சருக்கு அருகில் முன்வரிசையில், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவரையடுத்து, அமைச்சர் டெனீஸ்வரன், அதையடுத்து, பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் குருகுலராசா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

அவைத் தலைவராக சிவிகே சிவஞானம் செயற்படுவதில் பிரச்சினை எழுப்பப்படலாம் என்று முன்னர் தகவல்கள் வெளியான போதிலும், அந்த விவகாரம் தொடர்பாக எந்த சர்ச்சைகளும் இன்றைய அமர்வில் எழுப்பப்படவில்லை.

கடந்தவாரம் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், அதனால் இன்றைய அவை அமர்வுகளுக்கு  எந்தப் பாதிப்புகளும்  ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *