சீனாவுடனான உறவுகளால் இந்தியாவுடனான உறவுகள் பாதிக்கப்படாது – சிறிலங்கா தூதுவர்
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளால் இந்தியாவுடனான உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் சித்ராங்கனி வகீஸ்வரா தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘தி ஸ்டேட்மன்’ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சொந்த பொருளாதார அபிவிருத்தி நலனைக் கருத்தில் கொண்டு, எல்லா நட்பு நாடுகளுடனும், உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவே கொழும்பு விரும்புகிறது.
விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்கான சாத்தியங்கள் இல்லை. நாட்டுக்கு வெளியே உள்ள சிலர் தான் அவ்வாறான பரப்புரைகளை மேற்கொண்டு உணர்வுகளை தூண்டுகின்றனர். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தளவானவர்கள்.
மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால், நாங்கள் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்திருக்கிறோம். இப்போது, நாங்கள் மக்களுக்காக நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.
ஆனாலும், ஒரு நாட்டுடனான உறவுகளை இழந்து இன்னொரு நாட்டுடனான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதாக யாரும் கூற முடியாது.
நாட்டில் முதலீடுகளை கவர்வதற்காக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆசியான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்றவற்றுடன் இணைந்து பணியாற்ற கொழும்பு விரும்புகிறது.
இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை செய்து கொள்வதற்கு பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.
திருகோணமலை பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியில் பங்கேற்கும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது. ஆனாலும் இருதரப்புகளும் எப்போது உடன்பாட்டுக்கு வரும் என்று கூறும் நிலை இப்போது இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.