வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: விக்கியின் கையில் முடிவு – நழுவினார் சம்பந்தன்
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையில், இரண்டு அமைச்சர்கள் மீது அதிகார முறைகேடு, அதிகார வரம்பு மீறல், நிதி விரயம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த விடயத்தில் தாம் தலையீடு செய்யப் போவதில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே முடிவுகளை எடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.