10 நாடுகளில் கடற்படைத் தளங்களை அமைக்க சீனா திட்டம்- சிறிலங்காவும் உள்ளடக்கம்?
பத்து நட்பு நாடுகளில் சீனக் கடற்படையின் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ நாளிதழான PLA Daily ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன கடற்படையின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, PLA Daily யின் நேற்றைய இதழின் ஆசிரியர் தலையங்கத்தில், சீனாவுக்கு ஆறு விமானந்தாங்கி கப்பல்கள், விரிவுபடுத்தப்பட்ட மரைன் படைப்பிரிவு, பத்து நட்பு நாடுகளில் கடற்படைத் தளங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால நோக்கில், சீனா குறைந்தது ஆறு விமானந்தாங்கி கப்பல்கள், வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிகளின் தலைமையினலான கடல்சார் படைகள், தாக்குதல் நீர்மூழ்கிகளுடன், தனது விமானந்தாங்கி கப்பல் போர் அணிகளை, அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று சீன ஆயுதங்கள் கட்டுப்பாட்டு மற்றும் ஆயுதக்களைவு சங்கத்தின் மூத்த ஆலோசகர் Xu Guangyu தெரிவித்துள்ளார்.
“சீனா மேலும் சுமார் பத்து தளங்களை அமைக்கும். சீனா ஒவ்வொரு கண்டத்திலும் தளங்களைக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அது சீனாவுடன் ஒத்துழைக்க விரும்பும் நாடுகளைச் சார்ந்தது.” என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜப்பான், தாய்வான், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய தீவுச் சங்கிலியை உடைத்து, மேற்கு பசுபிக்கில் ஆதிக்கம் செலுத்துவதே, விமானங்தாங்கி கப்பல்களின் விரிவாக்கத்தின் முக்கிய நோக்கமான இருக்கும் என்றும் PLA Daily குறிப்பிட்டுள்ளது.
சீனா ஏற்கனவே தனது முதலாவது கடல்கடந்த இராணுவத் தளத்தை ஒரு விநியோக மையம் என்ற பெயரில் டிஜிபோட்டியில் கட்டி வருகிறது. அத்துடன் பாகிஸ்தானில் குவடார் துறைமுகத்தையும், சிறிலங்காவில் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கட்டியுள்ளது.
அம்பாந்தோட்டை ஒரு வணிக முயற்சி என்ற போதிலும், குவடார் துறைமுகத்தை கடற்படைத் தளம் என்றே பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு சீனா இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த மூன்றும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் 21 ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுப் பாதை திட்டத்தின் மையத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.