ஜப்பான்- சிறிலங்கா இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு
இந்தியப் பெருங்கடலில் அமைதியை பாதுகாப்பது என்ற பொதுவான தளத்தின் கீழ், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும், ஜப்பானிய தற்பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை ரோக்கியோவில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ரொமோமி இனாடாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதே, இந்தியப் பெருங்கடலில் அமைதியை பாதுகாக்கும் நோக்கில் இரண்டு நாடுகளின் படைகளும் இணைந்து செயற்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன எதிர்வரும் ஜூன் மாதம் ஜப்பானுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பாக, மேலதிக பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரிடம் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
புராதன காலத்தில் சிறிலங்காவின் பொருளாதார செழிப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டில் தான் தங்கியிருந்தது. இந்தியப் பெருங்கடலில் அமைதியை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.