வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண வசதிகள்
வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அதிபர், பிரதமர், நாடாளுமன்றத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
”நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபா கொடுப்பனவு, 2500 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.
தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக 1 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்காமல் அவர்களிடம் மேலதிக பொறுப்புணர்வுகளை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கு 1 இலட்சம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
அமெரிக்கா, இந்தியாவில் விமானப் பயணச்சீட்டுகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. வடக்கு கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம், விமானப்பயண வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.