இந்தியா நோக்கி விரையும் சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள்
சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள், இந்தியக் கடற்படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளன.
ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சயுர மற்றும் அதிவேக ஏவுகணைக் கப்பலான சுரனிமல ஆகிய சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்களே நேற்று கொழும்புத் துறைமுகத்தில் இருந்து இந்தியா நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தன.
இந்தக் போர்க்கப்பல்களில் 304 கடற்படையினர் மற்றும் 20 பயிற்சி மாலுமிகள் இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளனர்.
இன்று கொச்சின் துறைமுகத்தைச் சென்றடையும் சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் இரண்டும் எதிர்வரும் 28ஆம் நாள் வரை அங்கு தரித்து நிற்கும்.
இந்தக் காலப்பகுதியில் இந்தியக் கடற்படையினருடன் இணைந்து சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
அத்துடன் இந்தியக் கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தின் கீழ் உள்ள வென்டுருதி, மற்றும் துரோணாச்சார்யா ஆகிய தளங்களுக்கும் சிறிலங்கா கடற்படையினர் பயணம் செய்யவுள்ளனர்.