சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஐ.நா பொதுச்செயலர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமாலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்கத்தை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்த செயற்பாடுகள் தொடர்பாகவும், தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், இரண்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
அரசியலமைப்பு திருத்தம், அதிகாரப்பகிர்வு, கட்டமைப்பு மறுசீரமைப்புக்கான முயற்சிகள் தொடர்பாக, ஐ.நா பொதுச்செயலருக்கு, சிறிலங்கா அதிபர் விளக்கிக் கூறினார்.
அத்துடன் மீள்குடியமர்வு, காணிகள் விடுவிப்பு, புனர்வாழ்வு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், சிறிலங்கா அதிபர் எடுத்துக் கூறினார்.
இதன் போது கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் திருப்தி வெளியிட்டதுடன், சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஐ.நாவின் ஆதரவும், உதவியும் தொடர்ந்து கிடைக்கும் என்றும் உறுதியளித்தார்.