ஐ.நா பொதுச்செயலருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தலையீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிங்களத் தேசியவாத அமைப்புகள் நேற்று எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டன.
மூன்று நாள் பயணமாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமுன்தினம் கொழும்பு வந்திருந்த நிலையிலேயே, இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
கொழும்பிலுள்ள ஐ.நா செயலகம் முன்பாக முதலாவது ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை இடம்பெற்றது. ராவண பலய என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொழும்பிலுள்ள ஐ.நா செயலகத்துக்கு பான் கீ மூனின் வாகன தொடரணி வந்து சேர்ந்ததும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள், ஐ.நா வளாகத்துக்குள் நுழைய விடாமல் சிறிலங்கா காவல்துறையினர் தடுத்தனர்.
பின்னர், சிறிலங்காவில் ஐ.நாவின் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மனுவொன்று ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
அதேவேளை, கோட்டே தொடருந்து நிலையம் முன்பாகவும். ஐ.நா பொதுச்செயலரின் வருகைக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, ஐ.நா பொதுச்செயலருக்கு எதிராகவும், இலங்கையில் ஐ.நாவின் தலையீடுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.