கனடா இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் மோதிய இரு தமிழ் வேட்பாளர்களும் தோல்வி
கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நேற்று நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினர்.
1999ஆம் ஆண்டு தொடக்கம் லிபரல் கட்சியின் வசம் இருந்த ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில் நேற்றுக்காலை 9 மணி தொடக்கம், இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெற்றது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில் நடத்தப்பட்ட இந்த இடைத்தேர்தலில், லிபரல் கட்சி சார்பில் பிரகல் திரு, மற்றும் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் நீதன் சண் ஆகிய இரண்டு ஈழத்தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
எனினும், நேற்றைய தேர்தலில் முடிவில் வாக்குகள் எண்ணப்பட்ட போது, 7,393 வாக்குகளைப் பெற்ற, முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் ரேமன்ட் சோ வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிபரல் கட்சி வேட்பாளர் பிரகல் திரு 5,454 வாக்குகளைப் பெற்றார். அதேவேளை, தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட நீதன் சண், 4,923 வாக்குகளைப் பெற்றார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியில் இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியதாலேயே, வாக்குகள் பிரிந்து இரண்டு பேரும் தோல்வியடைந்ததாக கருதப்படுகிறது.