கனகராயன்குளத்தில் மர்மநபர்களால் சேதமாக்கப்பட்ட புத்தர்சிலை
வவுனியா- கனகராயன்குளத்தில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைவிடப்பட்ட முகாமில், அமைக்கப்பட்டிருந்த புத்தர்சிலை நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளத்தில் தனியார் காணியொன்றில் முகாமிட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரால், அந்தக் காணிக்குள் புத்தர் சிலை ஒன்று வைத்து வழிபாடு நடத்தப்பட்டிருந்தது.
குறித்த முகாமைக் கைவிட்டு சிறப்பு அதிரடிப்படையினர் வெளியேறிய நிலையில், நேற்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்த புத்தர்சிலையை உடைத்து சேதமாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.