மோடியின் வழியில் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்கிறார் சிறிலங்கா அதிபர்
வெனிசுவேலாவின் கராகஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அணிசேரா நாடுகளின் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாடு, அடுத்த மாதம் 17, 18ஆம் நாள்களில், கராகஸ் நகரில் நடைபெறவுள்ளது.
அணிசேரா நாடுகளின் அமைப்பின் ஆரம்பகால உறுப்பு நாடுகளில் ஒன்றான சிறிலங்காவின் சார்பில் இந்த மாநாட்டில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு பங்கேற்கும் என்றே முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கமாட்டார் என்றும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த மாநாட்டைப் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையிலேயே, சிறிலங்கா அதிபரும் இந்த மாநாட்டில் பங்கேற்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் செப்ரெம்பர் 19ஆம் நாள் நியூயோர்க் செல்லவுள்ளார். அவர் செப்ரெம்பர் 24ஆம் நாளே கொழும்பு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.