சிறிலங்காவில் புர்கா, நிஜாப் உடைகளுக்கு தடை – தேசிய பாதுகாப்புச் சபையில் ஆலோசனை
முஸ்லிம் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா மற்றும் நிஜாப் உடைகளை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார்.
சிறிலங்காவின் புலனாய்வுச் சேவை ஒன்றின் உயர் அதிகாரியின் ஆலோசனையின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். இந்த அதிகாரி முன்னைய அரசாங்கத்திலும் உயர் பதவியை வகித்தவராவார்.
புர்கா போன்ற முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டு, சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதை தடுக்கவே இந்த உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த அதிகாரி கோரியுள்ளார்.
எனினும், சிறிலங்கா பிரதமர் இந்த யோசனையை நிராகரித்து விட்டார். தமது அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் அளித்து வரும் ஆதரவை பாதித்து விடும் என்று அவர் இந்த திட்டத்தை நிராகரித்ததால், புர்கா மற்றும் நிஜாப் உடைகளுக்கு தடை விதிக்கும் யோசனை கைவிடப்பட்டுள்ளது.