யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுடன் சந்திப்பு
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார்.
கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபைக்குச் சென்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் அமெரிக்கத் தூதுவர் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், பொறுப்புக்கூறல் விடயங்கள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதேவேளை, யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில், நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்துப் பேசினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சரவணபவன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நல்லிணக்க விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்தச் சந்திப்புகளுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.