யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்”
யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் விமானப்படையினர் ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான உதவி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்க விமானப்படையின் சி-130 இராட்சத போக்குவரத்து விமானத்தில் பலாலி விமானப்படைத்தளத்தில் நேற்றுக்காலை தரையிறங்கிய 60 அமெரிக்க விமானப்படையினர், உள்ளூர் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க மக்களின் சார்பில், பசுபிக் கட்டளைப்பீடத்தினால். எடுத்து வரப்பட்ட மருத்துவ உதவிப் பொருட்கள் நேற்றுக்காலை பலாலி விமானப்படைத் தளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.
யாழ்ப்பாண மக்களுக்காக கையளிக்கப்பட்ட இந்த உதவிப் பொருட்களில் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் என்பன அடங்கியிருந்தன.
அதேவேளை, சிறிலங்கா விமானப்படை மற்றும் உள்ளூர் தொண்டர் நிறுவங்களுடன் இணைந்து. அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த 60 பேர், ஒருவாரகால ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான மருத்துவ உதவி நடவடிக்கையை நேற்று ஆரம்பித்தனர்.
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஒரு வார காலத்துக்கு இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அதேவேளை, இடைக்காடு மகாவித்தியாலயத்தில் அமெரிக்க- சிறிலங்கா மருத்துவ நிபுணர்களால் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமுக்கு, நேற்று இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன், அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட, அமெரிக்கத் தூதுவர் 1816ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்கர்கள் வந்த பின்னர், மிசனரி பாடசாலைகளும், மருத்துவமனைகளும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நீண்ட பாரம்பரியத்தை தொடர்வதில் வடக்கு மக்களுக்கு உதவுவதில் பெருமையடைகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், விமானப்படைத் தளபதி, சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.