“தமிழ்நாட்டுக்கு அடிமைப்பட நேரிடுமோ?” – சிங்கள மக்கள் அச்சம்
எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு அடிமைப்பட வேண்டிய நிலை ஏற்படுமோ என்று சிங்கள மத்தியில் அச்சம் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார், மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார.
“சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் எதுவும் அமைக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அத்துடன், இந்தியப் பாராளுமன்றத்தில் பாலம் அமைக்கப்படுவது தொடர்பாக பேசப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது இந்தோனேசியாவில் வைத்து அமைச்சர் கபீர் காசிம் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று சமஷ்டி முறைமையை வலியுறுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் வடக்கு தமிழ் மக்களும்கூட அச்சம் கொண்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.
அத்துடன் இது தொடர்பாக ஒரு நாள் விவாதத்துக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.