மகிந்த ஆதரவாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, அந்தக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றிரவு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவு அணியினர் அண்மையில் நடத்திய அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரையின் போது, சிறிலங்கா அதிபருக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே, சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது.