மகிந்தவின் மற்றொரு சதித்திட்டத்தை தோற்கடித்தார் மைத்திரி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, நீக்குவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவுத் தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கவே, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும், அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, எஸ்.பி.நாவின்ன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாக நேற்று மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களான இவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில், மைத்திரிபால சிறிசேன இந்த முடிவை எடுப்பதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டி, கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிவிட்டதாக தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை நீக்குவதற்கு, மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரச புலனாய்வுச் சேவை அறிக்கையை ஒனறை கையளித்திருந்தது.
இந்த சதித்திட்டத்தை தோற்கடிக்கவே, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட ஐந்து பேரையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்த மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நாளை கூட்டப்படவிருந்த மத்திய குழுக் கூட்டத்தையும் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.
ஐவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால்,இந்தக் கூட்டத்துக்கு அவசியமில்லை என்றும் அவர் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை கட்சியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள இந்த நடவடிக்கை சரியானதே என்று கூறியுள்ள டிலான் பெரேரா, எனினும், மத்திய குழுவின் மூலம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இன்னும் கூடுதல் ஜனநாயகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிந்திய செய்தி
இதற்கிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தைக் கூடடுவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்திருந்த உதத்ரவை எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் நாள் வரை நீடித்துள்ளது.
பிரசன்ன சோலங்காராச்சி சமர்ப்பித்திருந்த மனுவின் பேரில், ஏற்கனவே இன்று வரை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இன்று அந்த தடை உத்தரவு நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனை நீடித்து உத்தரவிட்டுள்ளது கொழும்பு மாவட்ட நீதிமன்றம்.