மட்டக்களப்பில் போட்டியிடும் கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் சௌந்தரராஜன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளராக- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சௌந்தரராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதன்படி, தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராசா (முதன்மை வேட்பாளர்), பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ரெலோ சார்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஜி.சௌந்தரராஜன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறீநேசன், ஆசிரியர் ச.வியாழேந்திரன் (அமல்) ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
ஏழு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில் எட்டாவது வேட்பாளர் குறித்து இழுபறி இருந்து வந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சௌந்தரராஜன் அந்த இடத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இதையடுத்து நேற்று மாலை அம்பிலாந்துறையில் உள்ள வேட்பாளர் அரியநேத்திரனின் இல்லத்தில் வைத்து, வேட்புமனுவில் வேட்பாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டனர்.
மட்டக்களப்பில் 8ஆவது வேட்பாளராக போட்டியிடும், ஜி.சௌந்தரராஜன் 1989ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, மட்டக்களப்பில் நான்காவது கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.