யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகள், அனந்தி சுயேட்சையாகப் போட்டியிடத் திட்டம்
முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாக இந்திய செய்தி நிறுவனமான பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன், இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக பிரிஐ செய்தியில் கூறப்பட்டுள்ளது.
“வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் சுயேட்சையாகச் போட்டியிடவுள்ளனர்.
யாழ்ப்பாணம், வன்னி மாவட்டங்களில் நாங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மாவட்டத்துக்கு தலா இரண்டு இடங்களை ஒதுக்கும் படி கூட்டமைப்பிடம் கோரியிருந்தது.
தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இதுபற்றிப் பேச முடியாது என்றும், எதிர்காலத்தில் இந்தக் கோரிக்கையை கருத்தில் எடுத்துக் கொள்வதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே, சுயேட்சையாகப் போட்டியிட முடிவு செய்திருப்பதாக இந்தியா செய்தி நிறுவனமான பிரிஐயிடம் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் தாமும் சுயேட்சைக் குழுவொன்றில் போட்டியிடவுள்ளதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தெரிவித்துள்ளார்.
இவர் நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனுப் பத்திரத்தைப் பெற்றுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு அனந்தி முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது வெற்றியளிக்காத நிலையிலேயே, சுயேட்சைக் குழுவொன்றில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்.