மகிந்தவுக்கு இடம் கிடைக்குமா? – இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார் மைத்திரி
மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிப்பது தொடர்பாக இன்று காலை 10 மணியளவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கோரும், கூட்டணிக் கட்சித் தலைவர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது, பிரதமர் வேட்பாளராகவோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் குழுத் தலைவராகவோ மகிந்த ராஜபக்சவை அறிவிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், அவருக்கு இடமளிப்பது குறித்த இறுதியான முடிவை, தமது கட்சியினருடன் கலந்துரையாடிய பின்னர், இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பதாகவும், மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின். இந்தக் கூட்டம் பயனற்றது என்றும் வெறுப்பேற்றும் வகையில் அமைந்திருந்ததாகவும், வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்றும், இதனால், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் வேறொரு சின்னத்தில் போட்டியிடும் அடுத்த தெரிவையே எதிர்பார்த்திருப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.