மேலும்

நேற்று நடைமுறைக்கு வந்தது 19வது திருத்தச்சட்டம்

19சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28ம் நாள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட, 19வது திருத்தச்சட்டம் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்திருப்பதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ச, நேற்று இந்த திருத்தச்சட்டத்தின் மூல ஆவணங்களில் ஒப்பமிட்டதை அடுத்தே, இது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இந்த திருத்தச் சட்டத்தில் இறுதிநேரத் திருத்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டதால், அதனை இறுதிப்படுத்தி மூல ஆவணத்தை தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில் வெளிநாடு சென்றிருந்த சபாநாயகர் சமல்ராஜபக்ச நாடு திரும்பியதையடுத்து. நேற்றுக்காலை 9 மணியளவில் 19வது திருத்தச்சட்டத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

இதையடுத்து, 19வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

எனினும், இந்த திருத்தச்சட்டத்தின் முக்கியமான பல பிரிவுகள், புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.

அதிபரின் அதிகாரங்களை குறைத்தல், நாடாளுமன்றத்தை கலைத்தல், அவசர சட்டங்களை சமர்ப்பிப்பதை இடைநிறுத்தல், நிதிச்சேவை ஆணைக்குழு உருவாக்கம், போன்ற பிரிவுகள் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும் என்று பிரதி நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் சுதந்திர ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *