மீண்டும் நேபாளத்தைத் தாக்கியது பாரிய நிலநடுக்கம் – சிறிலங்கா தூதரகமும் சேதம்
நேபாளத்தை இன்று நண்பகல் மீண்டும் தாக்கிய பாரிய நிலநடுக்கத்தினால் காத்மண்டுவில் உள்ள சிறிலங்கா தூதரகமும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை் ஒட்டியதாக உள்ள நம்சே பசார் பகுதியை மையம் கொண்டதாக , 18 கி.மீ ஆழத்தில் இன்றைய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 12.35 மணியளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் றிச்டர் அளவுகோலில், 7.4 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து. 12.40 மணியளவில் புதுடெல்லி, பீகார் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
இதையடுத்து, புதுடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதுடன், கட்டடங்களில் இருந்து மக்கள் வீதிக்கு ஓடி வந்தனர்.
நேபாளத்தை மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
எனினும், காத்மண்டுவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கும் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், அங்கு பணியாற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 25ம் நாள், நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.