ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிப்பு
சதொச வில் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு, வரும் மே 11ம் நாள் வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சதொசவில் 5 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நேற்று விசாரணைக்கு அழைத்த, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர், விசாரணையின் முடிவில் அவரை கைது செய்து, கொழும்பு பிரதம நீதிவான் முன்பாக நிறுத்தினர்.
அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்கவும், இன்று குருநாகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும், கொழும்பு பிரதம நீதிவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்றுகாலை குருநாகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை, வரும் 11ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.