மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம் – மருத்துவர்கள் தகவல்
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை கொழும்பில் நேற்று சந்திக்கச் சென்ற போது, திடீரென மயங்கி வீழ்ந்த மன்னார் ஆயர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பக்கவாத நோய் தாக்கியிருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை மன்னார் ஆயரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் உரையாடவும், கை,கால்களை அசைக்க முடிவதாகவும், மருத்துவர்களை மேற்கோ்ள்காட்டி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்றுமாலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட மன்னார் ஆயரைப் பார்வையிட எவரையும், மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
தமிழ்மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த மன்னார் ஆயர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது, உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.