வடக்கில் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்கும் கோத்தாவின் புதிய சதித் திட்டம்
சிறிலங்கா இராணுவத்தின் ஒரு குழுவினரைப் பயன்படுத்தி அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் குழப்பநிலையை ஏற்படுத்த சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சதித்திட்டம் தொடர்பாண ஆவணங்கள் இன்று நடந்த தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
“கோத்தாபய ராஜபக்ச இன்னமும் ஆட்சிக் கவிழ்ப்பில் நம்பிக்கை கொண்டுள்ளார்.
எனவே, இந்த விடயத்தை கூடிய வரையில் கவனத்தில் கொள்ளுமாறு தேசிய நிறைவேற்றுச் சபைக்குத் தகவல் தெரிவித்துள்ளேன்.
பிரிகேடியர் ஒருவரின் வழிகாட்டலின் கீழ், 400 இற்கும் அதிகமான இராணுவத்தினருக்கு வடக்கில் உள்ள இராணுவம் முகாம் ஒன்றில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பிரிகேடியர் கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்.
வடக்கில் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி, புலிகள் மீண்டும் தலையெடுத்து விட்டதாக குழப்ப நிலை ஒன்றை ஒருவாக்குவதே இவர்களின் நோக்கம்.
இதனைப் பயன்படுத்தி, ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தேர்தல் நாளன்று இரவு இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.