கொழும்பு துறைமுக நகரத் திட்டம் – இரண்டு வாரங்களில் முடிவு
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்று இரண்டு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீன அதிபர் கடந்த செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா வந்த போது, ஆரம்பித்து வைக்கப்பட்ட, கொழும்பு நகரத் திட்டத்தை தமது அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக, ரணில் விக்கிரமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சாத்திய ஆய்வு அறிக்கை மற்றும் சுற்றாடல் தாக்கங்கள் குறித்த அறிக்கை, அரசாங்கத்துக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடல் மற்றும் சாத்திய வளக் காரணிகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பிரதமர் செயலகத்தினால், மூன்று அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துறைமுக அதிகார சபை, முதலீட்டுச் சபை, தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் ஆகியவற்றிடம் இருந்தே பிரதமர் செயலகம் அறிக்கைகளைக் கோரியுள்ளது.
அதேவேளை, இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கை கோரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.