முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு கிழக்கு மாகாண ஆளுனர் பதவி?
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக, முன்னாள் பாதுகாப்புச் செயலரும், ஓய்வுபெற்ற சிவில் அதிகாரியுமான ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம், சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்பட்டிருந்தார்.
கிழக்கு மாகாண ஆளுனராக அவரை ஐந்து ஆண்டுகளுக்கு நியமிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
எனினும், ஆளுனர் பதவியுடன், அவர் அதிபரின் ஆலோசகர் பதவியையும் வகிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும், கூறப்படுகிறது.
ஒஸ்ரின் பெர்னான்டோ, சிறிலங்கா நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதுடன், போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், 2002 தொடக்கம் 2004 வரை பாதுகாப்புச் செயலராகவும் பதவி வகித்திருந்தார்.
கிழக்கு மாகாணசபையின் தற்போதைய ஆளுனராக முன்னாள் கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம பணியாற்றி வருகிறார்.
வடக்கு கிழக்கில் சிவில் ஆளுனர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நீடித்து வருகின்ற நிலையில், புதிய அரசாங்கம், ஏற்கனவே வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்காரவை நியமித்துள்ளது.
இந்தநிலையில் கிழக்கு மாகாண ஆளுனராக ஒஸ்ரின் பெர்னான்டோ நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.