கோத்தாபய திறந்த சர்ச்சைக்குரிய வங்கிக்கணக்கில் 13.2 பில்லியன் ரூபா
சர்ச்சைக்குரிய வகையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பேணப்பட்டு வந்த தனியான வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்த 13.2 பில்லியன் ரூபா பணத்தை, திறைசேரிக்கு மாற்றும்படி சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை வங்கியின் தப்ரபேன் கிளையில், இந்த வங்கிக் கணக்கு பேணப்பட்டு வந்தது.
இத்தகைய வங்கிக் கணக்கை தனியாக பேணுவதற்கு பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த வங்கிக் கணக்கு விடயத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், இந்த வங்கிக் கணக்கு திறக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபோன்று பல்வேறு சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், சமுர்த்தி நிதியில் இருந்து, 4 பில்லியன் ரூபா பணம் பரிமாற்றப்பட்டது உள்ளிட்ட இத்தகைய சட்டவிரோத சம்பவங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும், சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவில் கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அந்த வங்கிக் கணக்கில், சங்கிலி லா குழுமத்திடம் இருந்து கிடைத்த பணம் வைப்பிலிடப்பட்டிருந்த்தாகவும் அது அகுரேகொடவில் பாதுகாப்பு தலைமையக வளாக கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் தலைமைக் கணக்காளரால் இதுபற்றி விளக்கமளிக்க முடியும் என்றும், அந்த வங்கிக் கணக்கு தனது தனிப்பட்ட பெயரில் இருக்கவில்லை எனவும் கூறியதுடன், விரைவில் இதுபற்றி விரிவான விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.