‘சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறது’
கிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட ‘Stars and Stripes’ ஊடகத்தில் Wyatt Olson எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
கடந்த பத்தாண்டுகளில் முதன்முதலாக இந்த ஆண்டு சீனா தனது பாதுகாப்புச் செலவீனத்தை 131 பில்லியன் டொலராக உயர்த்தியுள்ளதாக இதன் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக இராணுவத் துறைக்காக அதிக நிதியை ஒதுக்கும் நாடாக சீனா விளங்குகிறது.
கடந்த ஆண்டை விட சீனா இந்த ஆண்டு 12 சதவீதத்தால் தனது பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் சீன மற்றும் கிழக்கு சீனக் கடற் பகுதியின் ஊடாக ஆசியாவைச் சேர்ந்த சில தீவுகளின் இறையாண்மையை உரிமை கோருவதாலேயே சீனாவின் பாதுகாப்புச் செலவீனமானது தற்போது மிகவும் அதிகரித்துள்ளது.
சீனா தனது கடந்த கால வரலாற்றில் மேற்கொண்டது போன்று பல நாடுகளின் இறையாண்மையை உரிமை கோருவதன் மூலம் ஒரு சக்தி மிக்க நாடாகத் தன்னை மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சீனத் தத்துவவாதியான கொன்பியூசியசின் கருத்துக்கள் மற்றும் சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டமை போன்ற வரலாற்று சார் நிகழ்வுகள் சீனா முன்னர் அதிகாரம் மிக்க ஒரு நாடாக விளங்கியதை உறுதிப்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான வரலாற்று நிகழ்வுகள் சீன கம்யூனிசக் கட்சியானது தனது அயல் நாடுகளின் கோபத்தைத் தணிப்பதற்கும் உள்நாட்டு அபிப்பிராய பேதங்களைக் களைவதற்காகவும் பயன்படுத்தி வரும் மிக முக்கிய கருவியாகக் காணப்படுகின்ற போதிலும் உண்மையில் இவை சீன வரலாற்றில் இடம்பெற்ற அசாதாரண விடயங்கள் என ஆசிய வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சீனா தனது உச்சக் கட்ட அதிகாரத்தைக் காண்பிப்பதற்காக தனது இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“சீனா பிராந்திய ரீதியாகவும் கடல் சார் ரீதியாகவும் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக இவ்வாறான புராணக் கதைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களைப் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறான சம்பவங்களைச் சுட்டிக்காட்டி நீரிலும் நிலத்திலும் மேலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முற்படுகிறது” என பாதுகாப்புக் கற்கைகளுக்கான ஆசிய-பசுபிக் மையத்தின் சீன வல்லுனரான மோகன் மலிக் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆக்கம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
“சீனாவின் பாடப் புத்தகங்களில் மத்திய இராச்சியத்தில் சீனாவால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றம் தொடர்பாகவும் மற்றும் தென் மற்றும் கிழக்கு ஆசியாவில் சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடுகள் சீனாவை மதிக்க வேண்டும் என்கின்ற கருத்தியல் உட்சேர்க்கப்பட்டுள்ளது” என மோகன் மலிக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் கடந்த கால வரலாறானது சீனாவின் கம்யூனிசக் கட்சியின் வெளியுறவுக் கோட்பாட்டில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இது சீனாவின் தற்போதைய அதிபர், சீன கம்யூனிசக் கட்சியின் தலைமை மற்றும் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் தலைமை போன்றவற்றுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
தற்போதைய சீன அதிபர் கி.மு 500ல் வசித்த ஆசிரியரும் தத்துவவாதியுமான கொன்பியூசியசின் கருத்தியலை வலியுறுத்தி வருகிறார். “சீனாவின் வரலாற்றுப் பாரம்பரியங்கள் நல்லாட்சிக்கும் திறமையான ஆட்சிக்கும் நன்மையை வழங்கும்” என செப்ரெம்பரில் பீஜிங்கில் இடம்பெற்ற கொன்பியூசியஸ் மன்றத்தில் சீனப் பிரதமர் தெரிவித்திருந்தார்.
“சீனாவின் கடந்த காலமானது இதன் எதிர்காலத்திற்கான ஒரு திட்டமாகக் காணப்படுகிறது” என மலிக் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய ஒழுங்கிற்கும் அதன் பாதுகாப்பிற்கும் மிகப் பெரிய சவாலாகக் காணப்படுகின்ற கம்யூனிசக் கட்சியின் வரலாற்றுப் பார்வையை சீனா தனது கடல் சார் செல்வாக்கை அதிகரிப்பதற்குப் பயன்படுத்துகிறது. “இங்கு வரலாறு என்பது ஒரு விவாதத்திற்குரிய ஒன்றாகக் காணப்படுகிறது. யாருடைய வரலாற்றுப் பார்வை துல்லியமானது?” என மலிக் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
“மாக்சிய மற்றும் லெனினிசக் கருத்தியல்கள் முறிவடைந்ததால் தற்போது சீனா அதன் கம்யூனிசக் கட்சியில் தங்கியிருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1989ல் தினமென் படுகொலை இடம்பெற்றதிலிருந்து சீனாவில் தேசப்பற்றுக் கல்வி என்பது ஊட்டப்பட வேண்டும் என சட்டமாக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் ஆட்சியை நியாயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது” என மலிக் குறிப்பிட்டுள்ளார்.
“சீனா ஒரு பிராந்திய சக்தியாக வளர்வதையே அதன் வெளியுறவுக் கோட்பாடு மிகப் பலமாக வெளிப்படுத்தி வருகிறது. இதனை சீன வரலாறு தொடர்பான ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. சீனா அதிகார சக்தியாக மாறியபோது அது மிகவும் ஆக்கிரமிப்பு மிக்க நாடாக விளங்கியது. இதேவேளையில் சீனாவின் அதிகார சக்தி குறையும் போது இது தன்னைத் தானே அதிகம் பாதுகாத்துக் கொண்டுள்ளது. இது சீனாவின் வரலாற்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது” என மேற்குலக மிச்சிக்கன் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் மற்றும் பொது விவகார, நிர்வாகக் கற்கைகளுக்கான திணைக்களத்தின் உதவிப் பேராசிரியரும் ‘Harmony and War: Confucian Culture and Chinese Power Politics’ என்கின்ற நூலின் ஆசிரியருமான யுவான் கங்க் வாங்க் குறிப்பிட்டுள்ளார்.
கொன்பியுசியசின் நீதி, சமூக மற்றும் தலைமைத்துவ தத்துவவியல்கள் கி.பி 960 தொடக்கம் 1644 வரையான காலப்பகுதியில் இராணுவத் தீர்வில் செல்வாக்குச் செலுத்தியதாக வாங் தெரிவித்தார். “சீனாவின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்த வேளையில் கொன்பியுசியசின் கருத்துக்கள் இதில் செல்வாக்குச் செலுத்தியதற்கான எவ்வித சாட்சியங்களும் காணப்படவில்லை. சீனா தனது இராணுவப் பலத்தை உபயோகிப்பது எனத் தீர்மானித்த போது சீனா மற்றும் இதன் சவால்மிக்க நாடுகளுக்கு இடையிலான வலுச் சமநிலை தொடர்பான உண்மையான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு கொன்பியுசியசின் தத்துவங்கள் பயன்படுத்தப்பட்டன. சீனா பலவீனமாக இருந்த போது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொண்டது” என வாங் குறிப்பிடுகிறார்.
1470களில் சீனா தனது அதிகாரம் குறைவதாகக் கருதியபோது சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கியதாக வாங் தெரிவித்தார். 20 ஆண்டுகாலம் சீனாவின் மிங் படைகளால் வியட்நாம் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டிருந்த காலத்தில் சீனப் பெருஞ்சுவரைக் கட்டுவதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டது.
கிறிஸ்தோபர் கொலம்பஸ் மாலுமியாக இருந்த சான்ரா மரியா கப்பலை விட 200 இற்கும் மேற்பட்ட மிகப் பெரிய கப்பல்களை சீனாவை ஆண்ட செங்க் ஹீ என்கின்ற ஆட்சியாளர் வைத்திருந்தார். பல சிறிய படகுகள் இணைக்கப்பட்ட இவ்வாறான 50 கப்பல்கள் 27,000 வரையான வீரர்களை ஏற்றிக்கொண்டு தென்கிழக்கு ஆசியாவான இந்திய உபகண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டன. இது சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். சீனாவின் இத்தகைய நடவடிக்கை சமாதான நடவடிக்கையை நோக்காகக் கொண்டதெனில் ஏன் இவ்வளவு பெருந்தொகையான சீன இராணுவ வீரர்கள் அந்தக் கப்பல்களில் பயணித்தனர் என வாங் கேள்வியெழுப்புகிறார்.
சிறிலங்காத் தீவைச் சேர்ந்த ஒரு அரசன் சீனர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எனவும் இவர் சீனாவின் ஆக்கிரமிப்பை உணர்ந்துக் கொள்ளத் தவறியமையே இதற்குக் காரணம் எனவும் வாங் குறிப்பிடுகிறார். இதேபோன்று சீனாவின் கடற்படையால் ஆதரவளிக்கப்பட்ட தற்போதைய இந்தோனேசியாவில் உள்நாட்டு யுத்தம் ஒன்று இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
சீனா கடந்த காலத்தில் அதிகாரம் மிக்க செல்வாக்கு மிக்க இராச்சியங்களைக் கொண்டிருந்தது என்பதற்கும் இதனை சீன ஆட்சியாளர்கள் மேலும் விரிவுபடுத்துவதற்காக ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டனர் என்பதையும் சீனாவின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் மூலம் உறுதிப்படுத்துவதாகவும் ஆனால் சீன அதிபர் சீனா வரலாற்று ரீதியாக நோக்கில் அதிகாரம் மிக்கதாகக் காணப்பட்டாலும் அமைதியை நிலைநாட்டிய நாடாகக் காணப்பட்டதாகக் குறிப்பிடுவது முரண்பாட்டைத் தோற்றுவிப்பதாக நோற்றே டாம் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை உதவிப் பேராசிரியர் விக்ரோரியா ரின்-போர்-கூய் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆசிய அயல்நாடுகள் சீனாவின் அதிகரித்து வரும் இராணுவப் பலம் தொடர்பாகக் கவலை கொள்வதுடன், எதிர்காலத்தில் சீனா தனது இராணுவப் பலத்தை தமக்கெதிராகப் பயன்படுத்துமோ என அச்சப்படுவதாக வாங் குறிப்பிட்டுள்ளார்.