ஐந்து நாள் பயணமாக இன்று சிறிலங்கா வருகிறார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் சிறிலங்காவுக்கு இன்று அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இன்று பிற்பகல் சிறிலங்கா வரும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதியை, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வரவேற்பார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, கூட்டுப்படைகளின் தளபதி, பாதுகாப்புச் செயலர், கடற்படை, விமானப்படைகளின் தளபதிகள், மற்றும் பீலுட் மார்ஷல் சரத் பொன்செகா ஆகியோரை பாகிஸ்தான் இராணுவத் தளபதி சந்தித்துப் பேசவுள்ளார்.
அத்துடன், கண்டி, காலி, நுவரெலிய, தியத்தலாவ பகுதிகளுக்கும், சில இராணுவத் தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிடவுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன், மேஜர் ஜெனரல் அசார் அப்பாஸ், கேணல் முகமட் காசிம், கப்டன் உமலர் சஜாட் ஆகியோரும் சிறிலங்கா வரவுள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் பயணம் ஏற்கனவே ஒருமுறை திட்டமிடப்பட்டு, வரிசிஸ்தான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.