தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஆரம்பம் – நல்லூரில் வெண்கலச் சிலை அமைப்பு
யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், அவரது இடுப்பளவிலான வெண்கல உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின், 39ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில், நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், அவரது வெண்கல உருவச்சிலை அமைக்கப்பட்டு, இன்று காலை 9.55 மணியளவில், பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை, தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுச் சுடரை மூத்த போராளி பசீர் காக்கா ஏற்றி வைத்து, தியாகதீபம் திலீபனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதையடுத்து, அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.






