மேலும்

22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின்  பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சட்டமா அதிபர் எதிர்வாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அரசியலமைப்பில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அடிப்படையில் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

பதவியில் இருக்கும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவது நீதித்துறை சுதந்திரம், அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் இறையாண்மை ஆகியவற்றைப் பாதிக்கிறது என்று அந்த மனுவில் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் விதிமுறையானது அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது என்றும், நாடாளுமன்றத்தில் சிறப்புப் பெரும்பான்மை மற்றும் பொது வாக்கெடுப்பில் மக்களின் ஒப்புதல் இல்லாமல் அது சட்டமாக முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, 22வது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து முதல் மனு,  சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கத்தின்  பொருளாளர் டி.எம்.எஸ். பசிந்து சில்வா மற்றும்  உதவிச் செயலாளர் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *