பின்கதவால் நாடாளுமன்றம் நுழைகிறார் மைத்திரி?
சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 16ஆம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவில் புதிய அதிபர் பொறுப்பேற்கவுள்ளார்.
எனினும், தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதனால் அவர், நியமன உறுப்பினராக தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் எதிர்பார்ப்பில் உள்ளார்.
இதற்காக அவர், ஊவா மாகாண ஆளுநர் பதவியைக் கொடுத்து, டிலான் பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகச் செய்து, அந்த வெற்றிடத்தின் மூலம், நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முயற்சியில் இறங்கினார்.
எனினும், ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்னவும், டிலான் பெரேராவும், பதவி விலக மறுத்து விட்டனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, பதவி விலகி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நுழைய இடமளிப்பார் என்று கூறப்படுகிறது.