திருகோணமலை கடற்படைத் தளத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி
கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரும், கடைசியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை கடற்படைத் தளத்தில் விசாரணைகளை நடத்துவதற்கு, குற்ற விசாரணைப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2008-09 காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் போது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் இந்த அனுமதியை வழங்கியது.
11 பேரும், காணாமல் ஆக்கப்படுவதற்கு முன்னர், தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை கடற்படை முகாமில், சட்ட மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், குற்ற விசாரணை அதிகாரிகள் என மூன்று குழுக்களை ஆய்வு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வரும் 10ஆம் நாளுக்குள் இந்த ஆய்வை நடத்தி, இந்தக் குழுக்கள் குற்ற விசாரணைப் பிரிவிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.