அதிகளவு வேட்பாளர்களால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதுப் பிரச்சினை
இம்முறை அதிபர் தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்குவதால், வாக்களிப்பு நிலையங்களில் இடவசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
இம்முறை அதிபர் தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதன்கிழமை வரை 20 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இது அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாகும்.
ஒவ்வொரு வேட்பாளரின் சார்பிலும் வாக்களிப்பு நிலையங்களில் இரண்டு முகவர்களை நியமிக்க முடியும்.
இதனால், 20 வேட்பாளர்கள் போட்டியிட்டால் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் 40 முகவர்களுக்கான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
முதலில் வருபவருக்கு முதலில் இடம் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கான இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
இடவசதிப் பிரச்சினை இருந்தால் ஏனையவர்களுக்கு வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியிலேயே இடமளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.